சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, “உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்” எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் கூடிய மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் (28) பேத்தாழை விபுலானந்த கல்லூரி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பேத்தாழை விபுலானந்த கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் உன்னத நினைவுகளைப் போற்றும் வகையிலும், அவசர தேவைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய காலப்பகுதியில் நிலவும் குருதித் தேவையைக் கருத்திற்கொண்டும், பொதுமக்களிடையே இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடும் நடாத்தப்பட்ட இந்த மனிதாபிமானப் பணியில், பழைய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர். சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை இவ்வாறானதொரு சமூகநலத் தொண்டுடன் கொண்டாடுவது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



















