நாட்டில் எதிர்வரும் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்து சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்த காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் காலை நேரங்களில் இன்னும் அதிக வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் வெப்பத்துடனான காலநிலை தொடர்பில் நேற்று (31) ஊடகங்களுக்கு விளக்கமளிக் கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘அதிக வெப்பத்துடனான காலநிலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சூரிய கதிர் வீச்சு இலங்கையின் அமைவிடத்தை அண்மித்து நேரடியாக கிடைக்கின்றமை, நீர் நிலைகளிலுள்ள நீர் நீராவியாகி வாயுமண்டலத்தில் சேர்ந்தாலும் முகில்கள் உருவாகும் தன்மை மிகவும் குறைந்துள்ளது. காற்றின் வேகமும் குறைந்துள்ளதால் வாயுகோளத்தின் நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் இந்த வெப்பத்துடனான காலநிலை நிலவுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையை அண்மித்தே சூரியன் இருப்பு அமைந்திருக்கும். இந்தக் காலப்பகுதியில் அதிக சூரிய சக்தி கிடைக்கும் என்பதால் காலை நேரங்களில் இன்னும் அதிக வெப்ப நிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எது எவ்வாறாக இருந்தாலும், இந்த வெப்ப காலநிலையை சமாளித்து கடமைகளை முன்னெடுப்பதற்கு வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருப்பது பொருத்தமானதாக இருக்கும். அதனூடாக வெப்ப ஈர்ப்பு குறைக்கப்படும். அதிக சோர்வை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுகிறார்கள் என்றால் தொடர்ச்சியாக நீரை அருந்த வேண்டியது அவசியமாகும். ஆனால் இனிப்புப் பானங்களை அருந்துவது பொருத்தமற்றது என்றார்.








