மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாக பஹ்ரைனில் அமைந்துள்ள அமேசான் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூட்டிங் (AWS) கட்டமைப்பு மீது ஈரான் நடத்திய தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக அண்மையில் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதன்கிழமை அன்று பஹ்ரைனில் உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சிவில் பாதுகாப்புப் படையினர் விரைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியதோடு இது ஈரானிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் விளைவு என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஒரே மாதத்திற்குள் அமேசான் வெப் சர்வீசஸ் உள்கட்டமைப்பு இந்தப் பிராந்தியத்தில் பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை முக்கியமான பணிகளை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
உலகளாவிய இணையதள செயல்பாடுகள் மற்றும் அரசு சேவைகளுக்கு அமேசான் வெப் சர்வீசஸ் ஒரு முக்கிய தூணாக விளங்குவதால் இத்தகைய தாக்குதல்கள் பிராந்தியத்தின் டிஜிட்டல் பாதுகாப்பிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலானது அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.








