மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க ஜனாதிபதி
முடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த செய்தியில் மேலும்,
பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் அவர் விரும்பினால் இராஜினாமா செய்யலாம் என்று
ஜனாதிபதி அவருக்குத் தெரிவித்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் பாரிய நிலக்கரி ஊழலில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தொடர்ந்து
குற்றம் சாட்டி வருவதும், இத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் குமார ஜயகொடியே இதற்குப்
பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதுமே
இறுதியாக, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு
வந்துள்ளது. இது அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக, சமீபத்தில் பேலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடைபெற்ற இரண்டு
கட்சித் தலைவர்கள் கூட்டங்களில், அரசாங்கத்தின் நேர்மையைப் பாதுகாக்க அமைச்சர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது. இதற்காக, கட்சியின் பல சிரேஷ்ட
அமைச்சர்கள் அமைச்சர் ஜயகொடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
ஆரம்பத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதை ஒத்திவைத்த ஜனாதிபதி, நேற்று (02) ஆளும் கட்சித்
தலைவர்களுடன் நடத்திய விசேட கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் ஜயகொடியிடம் இந்த முடிவைத்
தெரிவித்துள்ளார்.
நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, குமார ஜயகொடி அமைச்சராவதற்கு முன்பு செய்த
ஓர்ஊழல் பரிவர்த்தனை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் ஜனாதிபதியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.








