நாடு முழுவதும் உள்ள காட்சிப் பலகைகளில் ஒளிர விடப்பட்டுள்ள மின்விளக்குகளின்
எண்ணிக்கையையும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் தேவையில்லாமல் எரியும் தெருவிளக்குகளின்
எண்ணிக்கையையும் கணக்கிட்டு, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ்
நிலையங்களின் பொறுப்பாசிரியர்களுக்கும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தையும்
மேற்பார்வையிடும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய
உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் மற்றும் ஆற்றலை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் வழங்கிய
வழிகாட்டுதல்களைச் செயற்படுத்தத் தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் ஏற்றப்பட்ட தெருவிளக்குகள் மற்றும் காட்சிப் பலகைகள் குறித்த
விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு 2ஆம் திகதி அன்று பொலிஸ் மா அதிபர்
உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக, 3ஆம் திகதி பொலிஸ் நிலையங்களால் சமர்ப்பிக்கப்பட்ட
அறிக்கைகளின் துல்லியத்தன்மையில் தமக்குத் திருப்தி இல்லை என பொலிஸ் மா அதிபர.
தெரிவித்திருந்தார்.
இதன்படி, தேவையில்லாமல் எரியும் மின்விளக்குகள் மற்றும் காட்சிப் பலகைகளைக் கொண்ட
தெருவிளக்குகளின் எண்ணிக்கையைத் தனியாகக் கண்டறிந்து, அவை தொடர்பான
அறிக்கைகளைத் தமக்கு அனுப்புமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்
காரணமாக, போக்குவரத்துப் பணிகள், குற்றம் மற்றும் ஊழல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல
பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின் கம்பங்கள் மற்றும் காட்சிப் பலகைகளைக் கணக்கிடுவதற்கான
பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








