கொரியர் சேவையின் மூலம் கரடி பொம்மைக்குள் சூட்சுமமாக மறைத்து ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை, ஏப்ரல் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த 43 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது, கொரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொருட்களில் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மறைக்கப்பட்டிருந்த சுமார் 107 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் அளவிடப் பயன்படுத்தப்பட்ட இலத்திரனியல் தராசு, இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் பணத் தொகையும் சான்றுப் பொருட்களாக கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர், காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினராக இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் முதற்கட்டமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டதுடன், பின்னர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.








