ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police Clearance Certificate) சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விசா விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைபவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் சோதனை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2026 ஏப்ரல் முதல் இந்த புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.
புதிய விதிமுறைகளின் கீழ் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு குற்றப் பின்னணி இல்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆதாரத்தை வழங்க வேண்டும். இந்தத் சான்றிதழ் கட்டாயமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பொலிஸ் நடத்தைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறினால் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கையுடன் பின்வரும் நாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன:
எகிப்து – இந்தோனேசியா -நேபாளம் – ஆப்கானிஸ்தான் – ஈராக் – கென்யா – நைஜீரியா – கானா ஆகிய நாடுகளாகும்.
இந்த நாடுகளின் பட்டியல் அவ்வப்போது மாற்றப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விசா விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக முக்கிய சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








