நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்காத இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்யாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துபவர்களின் வாகனங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதோடு, ரூபா 15,000 முதல் ரூபா 25,000 வரையில் அபராதமும் விதிக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக புதிய வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தாலும் அடுத்த சில வாரங்களுக்குள் இப் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சரியான விபரக்குறிப்புகள் மற்றும் இலக்கத் தகடுகளை முறையாகப் பொருத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஏற்கனவே வாகன உரிமையாளர்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, முன் இலக்கத் தகட்டில் வெள்ளை பின்னணியில் கருப்பு எழுத்துக்களும் எண்களும் இடம்பெற வேண்டும், அதே சமயம் பின் எண் தகட்டில் மஞ்சள் பின்னணியில் கருப்பு எழுத்துக்களும் எண்களும் இடம்பெற வேண்டும்.
பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கத் தகடுகளுடன் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.








