மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற தந்தை செல்வா 49வது நினைவு தினம் நிகழ்வில் உரையாற்றிய இரா.சாணக்கியன், புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார். இது சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டுமெனவும், அத்தகைய மாற்றத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கமும், தென்னிலங்கை சிங்கள மக்களின் நம்பிக்கையும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பிளவு உள்ளது என்ற விமர்சனங்களை மறுத்த அவர், சமஷ்டி தீர்வில் அனைத்துக் கட்சிகளும் ஒரே கோட்டில் உள்ளதாகச் சொன்னார். அரசியலமைப்பு குறித்து அரசாங்கம் இதுவரை தெளிவான நிலைப்பாடு வெளியிடாத நிலையில், முதற்கட்டமாக சமஷ்டி தீர்வை ஒரு அடிப்படை கோரிக்கையாக முன்வைத்து, பின்னர் விவரங்களில் ஒருமித்த முடிவுக்கு வரலாம் என்றார்.

மேலும், நிலக்கரி தொடர்பான பிரச்சினை மற்றும் அரசுத் திறைசேரி நிதி மோசடி குறித்த தகவல்கள் குறித்து கவலை வெளியிட்ட அவர், 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன விவகாரத்தில் உடனடி பாராளுமன்ற நிதிக்குழு விசாரணை தேவை என வலியுறுத்தினார். அதேபோல், சில அரசியல் நபர்களின் சொத்துக்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.
தற்போதைய அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, அதன் அதிகாரத்தையும் பெரும்பான்மையையும் பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








