வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
வவுனியா விபுலானந்தா பாடசாலையில் “ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம்” என்ற தொனிப்பொருளில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
மலேரியா தடுப்பு பணிமனை ஏற்பாடு செய்த இந்நிகழ்வின் மூலம், இளைய தலைமுறையினரை மலேரியா போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன், அவர்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் 110-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். மலேரியா பரவலைத் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடம் தெளிவூட்டும் வகையில் போட்டிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், லோகேஸ்வரன் சிவசுப்ரமணியம் மற்றும் அவரது மனைவி மதி லோகன் ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து பரிசுகளை வழங்கினர். இந்த நிதியுதவி, சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் போது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பயிற்சி நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி பாஸ்கரன், பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் நிசாந்தினி, பாடசாலை பிரதம ஆசிரியர், வவுனியா செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.
மேலும், அனோபிலிஸ் நுளம்புகள் மூலம் பரவும் மலேரியா குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காய்ச்சல், குளிர், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும், வீட்டுச் சூழலில் நீர் தேங்காமல் பாதுகாப்பது மற்றும் கிணறுகளை சுத்தமாக வைத்திருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மக்களின் ஆரோக்கிய முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு முயற்சி, அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

















