ஏறாவூர் மக்கள் வங்கி கிளையில் நீண்டகாலமாக நிலவி வரும் ATM கோளாறுகள் மற்றும் CRM இயந்திரம் இல்லாமை தொடர்பாக, உள்ளூர் தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்த கையெழுத்து வேட்டை மற்றும் கவனயீர்ப்பு நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது.
சுமார் 50,000 மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பிரதான வங்கிச் சேவையாக விளங்கும் கிளையில் ATM இயந்திரம் அடிக்கடி பழுதடைவதால், பொதுமக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் சிறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்குக் கூட பணம் பெற முடியாத நிலை உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எந்த அரசியல் பின்னணியும் இன்றி இளைஞர்கள் ஒருங்கிணைத்த இந்த முயற்சிக்கு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் நகர சபை உறுப்பினர்கள் அஸ்மி, பர்ளின், நாசர், ரிக்னாஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வங்கி அதிகாரிகள், வரும் ஜூன் மாதத்திற்குள் புதிய CRM இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இதேவேளை, வாக்குறுதி நிறைவேற்றப்படாத பட்சத்தில், வங்கி கணக்குகளை மூடும் அளவுக்கு மக்கள் போராட்டத்தை விரிவுபடுத்தத் தயாராக உள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.













