இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டல குழப்பநிலை உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நேற்று (05) வெளியிடப்பட்ட அறிக்கையில் இதனை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வளிமண்டல அமைப்பின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்கால அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிக்கையின் படி, நாளை பல மாவட்டங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவ மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேற்கு, சபரகமுவ, தெற்கு, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், காலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








