செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று இடம்பெற்ற அகழ்வு பணிகளில், குழந்தை ஒன்றின் எலும்புக் கூட்டத்துடன் மேலும் இரு எலும்புக் கூட்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் எட்டாவது நாளான இன்று, தங்க ஆபரணம் என சந்தேகிக்கப்பட்ட ஒரு ஆபரணமும் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை ஐந்து எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளில் இருந்து குழந்தையின் எலும்புக் கூட்டு உட்பட இரண்டு எலும்புக் கூட்டங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில், இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியில் மொத்தம் 255 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 249 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான கருநிற மண்ணிலிருந்து எரிந்த நிலையில் சில எலும்புகள், நாணயத் துண்டுகள் போன்ற சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், மூக்குத்தி போன்ற உடைந்த சிறிய தங்க ஆபரணம், சில நாணயத் துண்டுகள், மரப்பெட்டி ஒன்றின் சிதைவுகள் மற்றும் ஆணிகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் எலும்புக் கூட்டு மண்ணிலிருந்து நேரடியாக அகழ்ந்து எடுக்க முடியாத நிலையில் இருந்ததால், அது துணியால் சுற்றி பாதுகாப்பாக மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக சட்டத்தரணி ஞானராஜ் ரணிதாதெரிவித்துள்ளார்.








