யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை நேற்று (06.05.2026) நேரில் சென்று பார்வையிட்டார்.
தையிட்டி பகுதியில் பொதுமக்களின் பூர்வீக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விகாரையை அகற்றி, தங்களது காணிகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாகும்.

காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் பலமுறை காணி அளவீட்டு பணிகளை மேற்கொள்ள முயற்சித்தது. எனினும், அதிகாரிகளின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை என தெரிவித்து, காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில், நேற்று மாலை தையிட்டி பகுதிக்கு சென்ற யாழ் ஆயர், விகாரை அமைந்துள்ள பகுதியையும் மக்களின் காணிகளையும் நேரில் பார்வையிட்டார்.
அதேவேளை, மக்களின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் அவர் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








