இலங்கையில் போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களையும் மறுசீரமைப்புகளையும் அவசரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபை கூட்டத்தின் போது அவர் இதனை வலியுறுத்தினார்.
கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் எந்தவிதத்திலும் மீண்டும் சமூகத்துக்குள் செல்லாதவாறு உறுதி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றை சட்ட நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதுடன், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி, ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீளச் சமூகத்துடன் இணைக்கும் நோக்கில், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க புனர்வாழ்வு திருத்தச் சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு மேம்பாட்டு திட்டங்களை மத வழிபாட்டு தலங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
மேலும், போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காக தனி நீதிமன்றம் அமைப்பது, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் வகையில் போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடைபெறும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சும் மகளிர் பணியகமும் இணைந்து விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் 26ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.








