யாழ்ப்பாணத்தை ஆளுவதற்காக தமிழக நடிகர் விஜயை அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருப்பது சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் செயலாகும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முப்பது ஆண்டுகள் நீடித்த யுத்த காலத்தில் முப்படையினரும் தங்களின் உயிரை பணயம் வைத்து வடக்கைப் பாதுகாத்ததாக அவர் குறிப்பிட்டார். அந்த இருண்ட காலத்தை மீண்டும் உருவாக்கும் வகையிலான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை ஏற்பட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட அர்ச்சுனாவை கடுமையாக விமர்சித்த அவர், இதே கருத்துகளை வெளியில் தெரிவித்திருந்தால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

மேலும், “தளபதி விஜய் எங்கள் நாட்டின் விவகாரங்களில் தலையிட முயற்சிக்க வேண்டாம். நீங்கள் தமிழ்நாட்டின் தலைவராக இருக்கலாம்; ஆனால் முழு இந்தியாவின் தலைவரோ பிரதமரோ அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ய முயன்றால் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பதிலளிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், மத்திய வங்கியின் உதவிப் பணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக நாடாளுமன்றத்தில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் உண்மையானதாக இருந்தால் அரசு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது 1988 மற்றும் 1989 காலப்பகுதியில் நிலவிய அடக்குமுறை சூழலை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிரமங்கள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். முன்பு மூன்று வேளை உணவு உண்ட மக்கள் தற்போது இரண்டு வேளை உணவுக்கே திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ராஜபக்ச குடும்பத்தினரின் பணம் உகாண்டாவில் இருப்பதாகக் கூறியவர்கள், தற்போது அதை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு மாறாக இளைஞர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சிங்களப் புத்தாண்டு போன்ற கலாசார நிகழ்வுகளை புறக்கணிக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கோயில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது முரண்பாடான செயலாகும் என்றும் அவர் விமர்சித்தார். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆட்சியாளர்கள் தற்போது மக்களையே துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருக்க வேண்டிய சிலர் தற்போது சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர் என்றும், அரசு சிங்கள மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் சீலரத்ன தேரர் தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.








