ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இது தற்கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
எனினும், பிணை வழங்கும் நடவடிக்கையின் போது கபில சந்திரசேனவின் உறவினர்கள் எனக் கூறி போலி பிணையாளர்களாக இரண்டு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையானது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பிணை நிபந்தனைகளின் அடிப்படையில், கபில சந்திரசேனவுக்காக அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உறவினர்களாக நடித்து முன்னிலையாகிய சந்தேகநபர்கள் தலா 15 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, பிணை நிபந்தனைகள் மீறப்பட்டதுடன் நீதிமன்றத்தின் நம்பிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கொழும்பு பிரதான நீதவான், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையிலேயே, கபில சந்திரசேனவின் சடலம் இன்று அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.








