உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான அறுகம்பே பகுதியில் சுற்றுலா பருவ காலம் ஆரம்பமான நிலையில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசங்களில் தற்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அப்பிரதேச மக்களுக்கும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை வழங்கும் நோக்கில், பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் கடந்த புதன்கிழமை (06) இரவு அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உவைஸ் பாரூக் தலைமையில் இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொத்துவில் மற்றும் அறுகம்பே பகுதிகளில் உள்ள இருபத்திநான்கு இரவு நேர உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன. அதில் சுகாதார விதிமுறைகளை மிகவும் மோசமாக மீறிய ஒன்பது உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மேலும், உணவக உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் சுத்தமான சூழலை பேணுவது தொடர்பாக வழிகாட்டலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
சுகாதாரத்துக்கு ஆபத்தான நிலையில் இருந்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அதேபோல், உணவக பணியாளர்களின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சமையலறைகளின் தூய்மை நிலை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர், உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ். ஜீவராஜா, பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.








