ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த ஒப்பந்தத்தில் பல மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய விமான சேவைக்காக 2.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பத்து எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் போது சுமார் 16 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாகப் பெற சதி செய்ததாகவும், அதில் 1.45 மில்லியன் யூரோவை சிங்கப்பூர் வங்கிக் கணக்கொன்றில் பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புரூணையில் தனது மனைவியின் பெயரில் போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த பணத்தை பரிமாற்றம் செய்ததாக தெரிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 12 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.
நீண்ட விளக்கமறியலின் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதன்போது ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இரு நபர்களுக்கு தலா பதினைந்து ஆயிரம் ரூபாய் வழங்கி அவர்களை போலி பிணையாளர்களாக முன்னிறுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றது.
இந்த செயல் நீதிமன்ற நம்பிக்கையை மீறும் செயல் என சுட்டிக்காட்டிய கொழும்பு மேலதிக நீதவான், அவரது பிணையை இரத்து செய்து மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் பொலிஸார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மரணத்திற்கான காரணம் தற்கொலையா அல்லது வேறு மர்ம காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின் உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2020 ஆம் ஆண்டிலும் இதே விமான கொள்வனவு ஊழல் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். சர்வதேச அளவில் பேசப்பட்ட இந்த ஊழல் வழக்கின் முக்கிய சந்தேக நபரின் மரணம் தற்போது நாட்டில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.








