பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் கொம்புகளை விற்பனை செய்ய முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை கடந்த மே மாதம் 2ஆம் தேதி கோட்டே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிக்கடுவ தேசிய பூங்கா தலைமையகம் மற்றும் பெல்லன்வில – அட்டிடிய வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் இணைந்து, இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட உளவுத்தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியில் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மான் மற்றும் சாம்பல் மான் கொம்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விலங்கு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமான செயல் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இவ்வாறான வனவிலங்கு உறுப்புகளை வைத்திருப்போர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், 1992 என்ற வனவிலங்கு அவசர உதவி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.








