மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நலனை பாதுகாக்க பெற்றோல், டீசல் மற்றும் தங்கப் பயன்பாட்டில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
சர்வதேச அளவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடியை சுட்டிக்காட்டிய பிரதமர், இறக்குமதி செய்யப்படும் பெற்றோலியப் பொருட்களை அவசியத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்வாறு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என்றும், போரால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை குறைக்கவும் இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மெட்ரோ ரயில் சேவை உள்ள நகரங்களில் மக்கள் அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலும் எரிபொருள் பயன்பாடும் குறைய தனியார் நிறுவனங்கள் மீண்டும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைத்த பிரதமர், தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்கு தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
“போர் காலங்களில் மக்கள் தங்கத்தை நாட்டிற்காக தானமாக வழங்கியுள்ளனர். இன்று தானம் தேவையில்லை. ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்கு அவசியமின்றி தங்கம் வாங்கமாட்டோம் என்ற உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகவும், பெற்றோலில் எத்தனால் கலக்கும் திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வீடுகளுக்கு குறைந்த விலையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டங்களும், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாட்டும் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்து வரும் இந்த நேரத்தில், வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் கடமையும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.








