அமெரிக்காவிற்கு மீன் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கையிலிருந்து கடல் நண்டுகளை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளதாகவும் கடற்றொழில், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது விதிக்கப்பட்டிருந்த “கடல் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்” கடுமையான நிபந்தனைகளை இலங்கை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் செயல்படும் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, இலங்கையின் கடல் நண்டு பிடிப்புச் செயல்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய விதிமுறைகள் அமெரிக்க தரநிலைகளுக்கு இணங்குவதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

2025 நவம்பரில் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட தரப்புகள் வழங்கிய அறிவியல் தரவுகளை பரிசீலித்த பின்னர், அந்த அமைப்பு தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு “ஒப்பீட்டுத் தகுதிச் சான்றிதழ்” வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிற்கு மீன் உற்பத்திப் பொருட்களை தடையின்றி ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அனுமதி 2029 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் எனவும், அந்த காலப்பகுதிக்குள் கடல் நண்டுகளை எந்தத் தடையும் இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டால்பின், திமிங்கலம் உள்ளிட்ட கடல் பாலூட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை பின்பற்றும் மீன்பிடி நடைமுறைகள் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னேற்றம் நாட்டின் கடற்றொழில் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிக்கவும் முக்கிய பங்களிப்பாக இருக்கும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.








