தையிட்டி பகுதியில் அமைந்துள்ள விகாரை வளாகத்திற்குள் உள்ள வலி வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கையை தடுக்க முயற்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த வீதியை மீட்கும் நடவடிக்கையை வலி வடக்கு பிரதேச சபை முன்னெடுத்து வரும் நிலையில், அதனை கைவிடுமாறு பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின் போது வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகினார்.
வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரதேச சபைக்கு சொந்தமான வீதி மறிக்கப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதை சட்டப்படி அகற்ற பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த வீதியை மீட்டால் சமாதான சீர்குலைவு ஏற்படும் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுக்காமல், அதற்கு இடையூறு செய்பவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “வீதியை தடுத்து வைத்திருப்பவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குலைவு ஏற்படும் என தெரிவிக்கின்றனர். அப்படியானால் சமாதான சீர்குலைவை ஏற்படுத்தப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது” என்றும் அவர் கூறினார்.
சட்டத்தை அமல்படுத்த முயற்சிப்பவர்களை தடுக்காமல், சட்ட மீறல்களை தடுக்க பொலிஸார் செயற்பட வேண்டும் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், சட்டத்தை நடைமுறைப்படுத்துவோருக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.








