2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் தமிழினப்படுகொலை நினைவு வாரம் இன்று முதல் மே 18 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இறுதி யுத்தக் காலத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காத சூழ்நிலையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உப்புக் கஞ்சி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காக்க உதவியதாக நினைவுகூரப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் கஞ்சி பெற வரிசையில் நின்ற மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், அந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழினப்படுகொலை நினைவு வாரத்தின் முதல் நாளான இன்று முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா. ஜீட்சன், முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வுகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் தேசியப் பேரவையினர் மற்றும் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
இதனிடையே, முள்ளிவாய்க்கால் நினைவுகளை எடுத்துரைக்கும் நினைவு ஊர்தி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கான தனது பயணத்தையும் ஆரம்பித்துள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவு நிகழ்வின் ஆரம்ப நிகழ்ச்சி தொண்டைமானாறு சன்னிதி முருகன் ஆலயத்தில் தமிழரசு கட்சியினரால் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மக்கள் சிரட்டையில் வழங்கப்பட்ட கஞ்சியை அருந்தி, முள்ளிவாய்க்கால் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதேச உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கஞ்சி வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.












