“மஹிந்த ராஜபக்ஷ திறைசேரியைக் கொள்ளையடிக்கவில்லை, மாறாக மக்களின் மனங்களையே கொள்ளையடித்துள்ளார்” என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை சுமார் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தது.
விசாரணையின் பின்னர் அவர் வெளியேறியபோது அங்கு திரண்டிருந்த மொட்டுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் மனோஜ் கமகே உரையாற்றினார்.

அவர் உரையாற்றுகையில், விசாரணைகள் நடத்தப்படும் காலம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மே மாதம் என்பது பிரபாகரனின் கதையை முடித்த மாதமாகும். அதனால்தான் இந்த மாதத்தை அரசு குறிவைத்துள்ளதாகவும், பிரபாகரனின் ஆத்மாவை சாந்தியடைய வைப்பதற்காகவே ஆளுந்தரப்பு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை ஒரு “சிங்கம்” என வர்ணித்த அவர், அவர் ஒருபோதும் குகைக்குள் ஒளிந்து கொள்ள மாட்டார் என்றும், சட்டத்திற்கு மதிப்பளித்து நேரடியாக வந்து வாக்குமூலம் வழங்கியதாகவும் கூறினார்.
திறைசேரி பிணைமுறி மோசடி மற்றும் நிலக்கரி மோசடிகளில் தொடர்புடையவர்களையும் இதேபோன்று விசாரிக்க அரசுக்கு துணிவு உள்ளதா எனவும் அவர் சவால் விடுத்தார்.
“மஹிந்த ராஜபக்ஷ என்பவர் இந்நாட்டு அரசியல் கலாசாரம். அவர் மீது கை வைக்கப்பட்டால் அழிவே ஏற்படும்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தார்.
அவர் கூறுகையில், புலம்பெயர் தமிழ் விடுதலைப் புலி ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட பொதுமக்கள் மீது மின் கட்டண சுமை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க போன்றவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய முயன்றால் அரசாங்கம் உடனடியாக வீழ்ச்சியடையும் எனவும், தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகள் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.








