இவை “ஜெமினி நுண்ணறிவு” அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, “ஆண்ட்ராய்டு” மற்றும் “க்ரோம் ஓஎஸ்” தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
“க்ரோம் புக்”க்கு அடுத்த கட்டமாக அறிமுகமாகும் இந்த “கூகுள் புக்” மடிக்கணினிகள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உதவிகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய அம்சமாக “மேஜிக் பொயின்டர்” இடம்பெற்றுள்ளது.
“டீப் மைண்ட்” குழுவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அம்சத்தின் மூலம், கர்சரை நகர்த்தும் போதே “ஜெமினி” உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மின்னஞ்சலில் உள்ள தேதியை தேர்வு செய்தால் உடனடியாக கூட்டம் ஒன்றை அமைக்க முடியும். அதேபோல் இரண்டு படங்களை தேர்வு செய்தால் அவற்றை ஒரே இடத்தில் இணைத்து காண்பிக்கும் வசதியும் உள்ளது.

மேலும் “உங்கள் சொந்த விட்ஜெட் உருவாக்கம்” என்ற வசதி மூலம் பயனர்கள் மின்னஞ்சல் மற்றும் காலண்டர் போன்ற கூகுள் பயன்பாடுகளை இணைத்து தனிப்பட்ட தகவல் பலகையை உருவாக்கலாம். குடும்ப நிகழ்ச்சி திட்டமிடல், விமான மற்றும் விடுதி தகவல்கள், உணவக முன்பதிவு, கவுண்ட்டவுன் போன்றவை ஒரே இடத்தில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கூகுள் புக்” மடிக்கணினிகள் “ஆண்ட்ராய்டு” சூழலில் இயங்குவதால், மொபைல் மற்றும் மடிக்கணினி இடையே எளிதாக இணைந்து செயல்பட முடியும். உதாரணமாக, மடிக்கணினியில் வேலை செய்யும் போதே மொபைல் செயலிகளை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்யவும், மொழி கற்றல் பயன்பாட்டை தொடரவும் முடியும்.
மேலும் “விரைவு அணுகல்” வசதியின் மூலம் மொபைல் கோப்புகளை நேரடியாக மடிக்கணினியின் கோப்பு மேலாளியில் காணலாம்.
கூகுள் நிறுவனம் ஏசர், ஆசுஸ், டெல், எச்.பி., லெனோவோ போன்ற நிறுவனங்களுடன் இணைந்து உயர்தர வன்பொருள் கொண்ட “கூகுள் புக்” சாதனங்களை உருவாக்கி வருகிறது. தனித்துவமான வடிவமைப்புடன் இந்த சாதனங்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் உருவாக்கப்படுகின்றன.
இந்த சாதனங்கள் இரண்டாயிரத்து இருபத்தாறு ஆம் ஆண்டின் இறுதியில் சந்தையில் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது.








