முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளை ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை காலை நடைபெற்றது.
மட்டக்களப்பு–திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள புரவி பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில், யுத்தத்தில் உயிரிழந்தோருக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவஞ்சலி சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் டினேஷ், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள், இளைஞர் அணி பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினர்.








