கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச்சேதங்கள் மதிப்பிடப்பட்ட பின்னர், சேத விபரங்களுக்கு அமைய ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகிய பயிர்களுக்காக இந்த இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சேதமடைந்த பயிர்கள் தொடர்பான விபரங்களை அடுத்த 14 நாட்களுக்குள், அந்தந்த விவசாய சேவை நிலையங்களில் பராமரிக்கப்படும் ‘சேத விபரங்களை அறிவிக்கும் பதிவேட்டில்’ விவசாயிகள் பதிவு செய்தல் வேண்டும். இந்த இழப்பீட்டுத் திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து எந்தவொரு காப்புறுதித் தவணைக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாகப் பல மாவட்டங்களில் பயிர்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தேங்கியுள்ள நீர் வற்றிய பின்னரே சேதமடைந்த பயிர்நிலங்களின் உண்மையான பரப்பளவைக் துல்லியமாகக் கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான யல பருவப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட உடனே இந்த அதிக மழை பெய்துள்ளதால், சேதமடைந்த பயிர்கள் அனைத்தும் அவற்றின் ஆரம்பக் கட்ட வளர்ச்சியிலேயே காணப்படுகின்றன.
நாட்டின் விவசாயப் பெருமக்களின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். எனவே, இது தொடர்பான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாய மக்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரினால் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபைக்கு அவசர அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.








