2026ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில், தற்போதைய நீர் கட்டணத்தை எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கே அமைச்சரவை இவ்வாறு உடன்பாடு வழங்கியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்டண சூத்திரத்தின்படி, செலவுக் காரணிகளின் அடிப்படையில் அரையாண்டுக்கு ஒருமுறை நீர் கட்டணம் மீளாய்வு செய்யப்பட வேண்டும். எனினும், 2025ஆம் ஆண்டுக்கான நிதிப் பகுப்பாய்வின் அடிப்படையில், தற்போதைய கட்டண நிலவரத்தைக் கொண்டே நீர் வழங்கல் சபையின் செயல்பாட்டுச் செலவுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, பொதுமக்களுக்குச் சுமையேற்படாத வகையில் அடுத்த 6 மாதங்களுக்கும் நீர் கட்டணத்தை உயர்த்தாமல் அதே மட்டத்தில் பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.








