மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் (e-DAS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்பட்டு, தற்போது படிப்படியாகப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பத்தரமுல்லையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் இச்சான்றளிப்புச் சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பை விரைவில் முழுமையாக மீட்டெடுப்பதற்கான பணிகள் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், இச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இத்தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அமைச்சு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.








