“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினரும் காணப்படுகின்றனர். இப்பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். ஆனால், அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஜெனீவாவில் தேடக் கூடாது எமது நாட்டுப் பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“மூன்று தசாப்த கால கொடூரம் நிறைந்த யுத்தத்தினால் பாதிப்புகளுக்கு ஆளான மக்களை, இராணுவ வெற்றியின் மூலம் மீட்டெடுத்த சுதந்திர நாடொன்று நம்மிடம் உள்ளது. சிறப்பு மிக்க இந்நாளில், இந்த யுத்த வெற்றிக்கு அரசியல் ரீதியாகத் தலைமைத்துவத்தைப் பெற்றுத் தந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இராணுவத் தளபதியாகத் தலைமை தாங்கிய ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முப்படைகளையும் சேர்ந்த வீரர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினருக்கும் எனது விசேட மரியாதையைச் செலுத்திக் கொள்கிறேன்.
தங்கள் குடும்பங்களை இரண்டாம் இடத்திலும், நாட்டை முதல் இடத்திலும் வைத்து, தேசத்தைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உயிர்களையும், உடல் பாகங்களையும், இரத்தத்தையும் தியாகம் செய்த வீரமிக்க முப்படை வீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்.
யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இப்போது வளர்ந்து இளைஞர்களாக இருப்பார்கள். அன்று அவர்களுக்கு ஏற்பட்ட வேதனைகளையும் துன்பங்களையும் நாங்கள் அறிவோம். கொடூரமான பயங்கரவாத யுத்தத்தினாலேயே நானும் எனது தந்தையை இழந்தேன். இதனால் எனக்கும் அந்தப் பிரிவுத் துயரமும் வேதனையும் நன்றாகவே புரியும். இராணுவக் குடும்பங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளை நான் அறிவேன். இத்தகைய வேளையில் ‘இராணுவ வீரர்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் தயங்கக்கூடாது. அத்துடன், இனிமேலும் அதுபோன்றதொரு யுத்தம் நாட்டில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
மீளக்கட்டியெழுப்புதல் செயற்பாடுகள், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கச் சூழல் ஆகியவற்றின் ஊடாக, எமது நாட்டுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். உண்மையிலேயே இந்நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு போன்ற விடயங்கள், இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே உண்மையான சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படுவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
இதன் பிரகாரம், யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வுகளை எமது நாட்டுக்குள்ளேயே வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவுக்குச் சென்று பேசுவது நிறுத்தப்படும் வகையில்; நாட்டின் ஒருமைப்பாடு, ஆட்புல எல்லை, இறைமை மற்றும் அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்படும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற யோசனையை நான் முன்வைக்கின்றேன்.
அதேபோல், படை வீரர்களின் குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய உரிய அந்தஸ்தையும் நலன்புரிகளையும் ‘ரணவிரு சேவா அதிகார சபை’ ஊடாக மாத்திரம் முழுமையாகப் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே, அமெரிக்காவைப் போன்று பிரத்தியேகமான திணைக்களமொன்றைத் தாபித்து, படை வீரர்களின் நலன்புரித் திட்டங்களைச் சர்வதேசத் தரத்தில் முன்னெடுக்க வேண்டும்.
கொடூரமான பயங்கரவாத யுத்தத்தின் காரணமாக நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் மூலம் நாட்டின் பிரச்சினைகள் நாட்டுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும்” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








