களுத்துறை தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட திடீர் விசேட சோதனையில், போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி நேற்று (19) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து மருத்துவ அதிகாரிகளும் பொலிஸாருடன் இணைந்து செயல்பட்டனர்.
பயணிகள் பேருந்துகளை இயக்கி வந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது, போதைப்பொருள் பாவனையின் அடையாளங்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 8 சாரதிகளும் ஒரு நடத்துனரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35 முதல் 57 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் பயாகல, யட்டியன, தொடம்கொட, தெபுவன, மீகஹதென்ன மற்றும் களுத்துறை தெற்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து சேவையில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








