அரசின் வரி வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் 28 தொழில்துறைகளை உள்ளடக்கிய வகையில் 5% முன்கூட்டிய வரி (Withholding Tax) அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு தொழில்முறை நிபுணர் அல்லது சேவை வழங்குபவர் ஒரு நிறுவனத்திடமிருந்து ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான கொடுப்பனவைப் பெறும் நிலையில், அந்த தொகையிலிருந்து 5% வரி முன்கூட்டியே கழிக்கப்படும் என அவர் கூறினார். இது புதிய வரி அல்ல என்றும், ஏற்கனவே உள்ள வரியை வசூலிக்கும் முறையை மேம்படுத்தும் நடவடிக்கை மட்டுமே என்றும் அவர் விளக்கினார்.
நாட்டில் வரி கோப்புகளின் எண்ணிக்கை முன்னர் சுமார் 8 இலட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 13 இலட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் 23 இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் அனைவரையும் வரி அமைப்புக்குள் கொண்டு வருவது அரசின் இலக்காக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 13 இலட்சம் பேருக்கு வரி அடையாள எண் (TIN) வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் TIN கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பிடித்தம் செய்யத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் முக்கிய நோக்கம் தற்போதுள்ள 80% மறைமுக வரி மற்றும் 20% நேரடி வரி என்ற அமைப்பை மாற்றி நேரடி வரி வருவாயை அதிகரிப்பதாகும் என்றும் இதன் மூலம் பொதுமக்கள் மீது உள்ள மறைமுக வரிச் சுமையை குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்களையும் படிப்படியாக வரி அமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.








