நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பினையும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே ஏற்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டுகால கொடூர போரை வெற்றிகொண்ட எமது நாட்டுப் படைவீரர்களை நினைவு கூர்வதற்கு இந்த அரசாங்கத்தினால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவில் எம்மால் நடத்தப்பட்ட படைவீரர் உபகார நிகழ்விற்கு அரச தரப்பிலோ அல்லது இராணுவத் தரப்பிலோ எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படவில்லை. எனினும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எவ்வித அச்சமுமின்றி இந்நீதிமன்ற நிகழ்வில் கலந்துகொண்ட வெலிஓயா தமிழ் பிரதேச செயலாளருக்கு எனது நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராணுவ வீரர்களின் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கும் இந்த அரசாங்கம், முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவ்வித தடையும் இன்றி தாராளமாக அனுமதி வழங்கியுள்ளது.

இது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினையாகும். பிரபாகரனையோ அல்லது தற்கொலைக் குண்டுதாரிகளையோ கொண்டாடி மகிமைப்படுத்துவதன் மூலம், மற்றுமொரு பிரபாகரன் உருவாவதைத் தடுக்க முடியாது. இதன் காரணமாக மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கி ஒரு போர் ஏற்பட்டால், அதன் முழுப் பொறுப்பினையும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த நன்றிகெட்ட அரசாங்கமே ஏற்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தென்னிந்தியாவில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் (தளபதி) அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில் மே 18 ஆம் திகதியை ‘தமிழர் இனவழிப்பு தினமாக’ பிரகடனம் செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால், உண்மையில் இலங்கையில் தமிழின அழிப்பைத் தடுத்ததே எமது நாட்டுப் பாதுகாப்புப் படையினர்தான் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
போரின் இறுதிக்கட்டத்தின் போது பிரபாகரன் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்.
உலகில் எந்தவொரு இராணுவமும் செய்யாத சாதனையைக் காட்டி, இரண்டு லட்சத்து 95 ஆயிரம் பணயக் கைதிகளைப் பாதுகாப்பாக மீட்டுப் போரை வெற்றிகொண்ட பெருமை எமது இராணுவத்திற்கே உண்டு. அன்று போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் ஒரு தேநீரோ அல்லது ஒரு யோகட் கப்போ கூடக் கொடுத்து உதவ முன்வரவில்லை. எனவே, தமிழ் மக்களின் நலன்கள் குறித்துப் பேச இவர்களுக்கு எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை எனவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.








