தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு யாழ் மாவட்ட மீனவ சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதுடன், கச்சதீவு தொடர்பில் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மீண்டும் முன்னிறுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம், கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமான பகுதி என்பது தமிழக மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயமாகும் என குறிப்பிட்டார்.
தமிழக தேர்தல் காலங்களில் மீனவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு அரசியல் தலைவர்கள் கச்சதீவு விவகாரத்தை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகிவிட்டதாகவும், அதனை யாழ் மீனவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கச்சதீவு தொடர்பில் உண்மைக்கு முரணான கருத்துக்கள் முன்வைக்கப்படக் கூடாது என்றும், அந்த விவகாரத்தை மீண்டும் அரசியல் ரீதியாக கையாள முயன்றால் வடக்கு மீனவர் சமூகத்தின் கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளன தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ், இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை மீறி வருவதால் வடக்கு மீனவர்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள், வடக்கு கடல் வளங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் மீனவர்களின் விலையுயர்ந்த மீன்பிடி வலைகளையும் அழித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவில் தற்போது அமுலில் உள்ள மீன்பிடி தடைக்காலம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதன் பின்னர் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








