பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் (கம்பனிகளின்) உயர் அதிகாரிகள், மலையகத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கொரு நிரந்தர தீர்வைக் காணும் பொருட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில், இம்முடிவெடுக்கும் உயர்மட்டக் கூட்டம் நாளை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார நலன்கள் குறித்துப் பல சாதகமான, தீர்க்கமான தீர்மானங்கள் எட்டப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.








