நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலக்கரியை “முழுமையாக தரமற்றது” என விவரிப்பது தவறான புரிதலை உருவாக்குவதாக எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், குறித்த நிலக்கரியின் பிரதான சிக்கல் அதன் ஆற்றல் உற்பத்தித் திறன் எதிர்பார்த்த அளவை எட்டாததேயாகும் என குறிப்பிட்டார்.
அதேவேளை, நிலக்கரி தரத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், அதனை முழுமையாக நிராகரிக்கும் நிலை ஏற்படவில்லை என்றும், தொடர்ந்தும் மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலக்கரி தொடர்பான இழப்பீடாக சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர், நுரைச்சோலை உள்ளிட்ட அனல் மின் நிலையங்களில் இயங்கும் தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இதனால் எந்தவித சேதமோ பாதிப்போ ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.
மேலும், மின்சார உற்பத்தி செயல்முறைகள் வழக்கம்போல தொடரும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.








