தேசிய கலைக்கூடத்திலிருந்து (National Art Gallery) வரலாற்றுப் பெறுமதிமிக்க சுமார் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இந்த அதிர்ச்சித் தகவலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை (Board of Survey) ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்திலுள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து விரிவான தணிக்கைக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதன் பின்னரே, இத்தனித்துவமான பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பான விபரங்கள் உத்தியோகபூர்வமாகப் பதிவாகியுள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, தேசிய கலைக்கூடத்தின் உத்தியோகபூர்வ இருப்புப் புத்தகத்தில் (Stock Book) பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த ஓவியங்களின் எண்ணிக்கை 281 ஆக இருந்தபோதிலும், தற்போதைய களநிலவரப்படி கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாகப் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி மேலும் தெரிவித்தார்.








