காசாவை நோக்கி மனிதாபிமான உதவிகளுடன் பயணித்த ‘குளோபல் சுமூத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) என்ற சர்வதேச உதவிக்கப்பல் பேரணி, சர்வதேச கடல் எல்லையில் வைத்து இஸ்ரேலிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டு, அதிலிருந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போது உலக அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணம், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) மனிதாபிமான நெறிகளுக்கு அப்பாற்பட்டு வெளியிட்டுள்ள ஒரு கொடூரமான அவமதிப்பு வீடியோவாகும்.
அஸ்தோத் (Ashdod) துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்பு முகாமில், சர்வதேச ஆர்வலர்கள் அனைவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் முழங்காலிட்டு, தலைகளைத் தரையில் முட்டியவாறு வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் முன்னிலையில் இஸ்ரேலிய கொடியை அசைத்தவாறு தோன்றிய அமைச்சர் பென்-க்விர், “இஸ்ரேலுக்கு நல்வரவு, நாங்களே இங்கு எஜமானர்கள்” என ஹீப்ரு மொழியில் கேலி செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி, கைது செய்யப்பட்ட பெண் ஆர்வலர் ஒருவர் “பாலஸ்தீனத்திற்கு விடுதலை” (Free Palestine) என கோஷமிட்டபோது, முகமூடி அணிந்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அவரது தலையைத் திருப்பி, தரையில் பலவந்தமாகத் தள்ளி இழுத்துச் செல்லும் அதிர்ச்சிகரமான காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதற்கு அமைச்சர் பென்-க்விர் சிரித்தபடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்த மனிதநேயமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 87க்கும் மேற்பட்ட சர்வதேச ஆர்வலர்கள் சிறைக்குள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளனர்.
இந்த மனித உரிமை மீறல் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனக் குரல்கள் தீவிரமடைந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, இத்தாலி, துருக்கி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தச் செயலுக்குத் தங்களது கடுமையான கண்டனங்களை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளன. மேலும், தத்தமது நாடுகளில் உள்ள இஸ்ரேலிய தூதுவர்களை அவசரமாக அழைத்து, இந்த அநாகரிகமான போக்கிற்கு எதிரான கடுமையான ஆட்சேபனைகளையும் பதிவு செய்துள்ளன.

இவ்விவகாரம் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது அந்நாட்டு அரசாங்கத்திற்குள்ளும் (Israeli Cabinet) பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் நற்பெயருக்கு அமைச்சர் பென்-க்விர் கடுமையான களங்கத்தை விளைவித்துவிட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) பகிரங்கமாகச் சாடியுள்ளார். அத்துடன், இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் “இஸ்ரேலின் விழுமியங்களுக்கும் அடிப்படை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் அப்பாற்பட்டவை” எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது சொந்த அமைச்சரின் நடவடிக்கைக்கு எதிராகத் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சர்வதேசச் சட்டங்களை மீறிச் சர்வதேசக் கடல் எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தடுப்புக் காவலும், அதனைத் தொடர்ந்து வந்துள்ள இந்த வீடியோவும், காசா விவகாரத்தில் இஸ்ரேலுக்கு உலக அரங்கில் புதிய இராஜதந்திர நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








