வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமைத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கின் 248, 249, 251, 255 மற்றும் 256 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருகிறது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் இப்பகுதிகளிலிருந்து வெளியேறாததால் மக்கள் தொடர்ந்து தங்குமிடங்களிலேயே வாழும் அவலம் நீடிக்கிறது. தமது பூர்வீகக் காணியான சுமார் 651 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை நடத்த மக்கள் தீர்மானித்திருந்தனர். அதற்கமைய, இன்றைய தினமும் மயிலிட்டி பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், “எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் வெசாக் தினம் வரை அப்பகுதி முழுவதும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டுப் பாரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கு அனைத்து அரசியல்வாதிகளும், அரச நிர்வாக உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் வருகை தந்து ஆதரவளிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இன்றைய போராட்டத்தில் வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி. நிரோஷ் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இதேவேளை, இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “மக்களின் காணிகள் மக்களுக்கே எனக் கூறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஏன் எமது காணிகளை இன்னும் விடுவிக்கவில்லை? மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் செய்த கர்மவினைதான் அவர்களின் ஆட்சியை இல்லாமல் செய்தது. அதேபோல், அநுர அரசாங்கமும் மக்களைத் துன்புறுத்தும் வகையில் செயற்பட்டால், அந்த வினையே அரசாங்கத்தை நிலைகுலைய வைக்கும்.
நாங்கள் அரசாங்கத்திடம் வாழ்வதற்குப் பணம் கேட்கவில்லை; எமது சொந்தப் பணத்தில் வாங்கிய காணியை இராணுவப் பிடியிலிருந்து மீட்டுத் தருமாறே கோருகிறோம். ஆகவே, கடந்த கால ஆட்சிகளுக்கு நடந்த கர்மவினையை நினைவில் கொண்டு, வழங்கிய வாக்குறுதியின்படி எமது காணிகளை விரைவாக விடுவித்துத் தர வேண்டும்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.








