நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (22) ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
அத்துடன், இந்த அனர்த்த நிலைமை காரணமாக 4 மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 201 பேர் தற்போது 06 தற்காலிகப் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சீரற்ற வானிலையால் 123 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கம்பஹா – அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவில் பதிவாகியுள்ளதுடன், அதன் அளவு 137.80 மில்லிமீற்றர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.








