கொழும்பு – பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ‘சிறிசர உயன’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) தொடர்ச்சியாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு எதிராகச் சர்வதேசப் பொலிஸாரினால் (Interpol) ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாட்டில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் நேற்று (22) மீண்டும் நாட்டிற்குத் திரும்பிய போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.








