பிரித்தானியாவின் இலண்டன் நகரில் அமைந்துள்ள சவுத் ஹாரோ பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.40 மணியளவில் ஈஸ்ட்கோட் லேன் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அவதானித்த பொலிஸார் உடனடியாக மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர்.
விபத்து தொடர்பான அவசர அழைப்பைத் தொடர்ந்து மருத்துவ அவசர சேவை, வான்வழி ஆம்புலன்ஸ் குழு மற்றும் சிறப்பு மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும், மருத்துவர்களின் போராட்டத்தையும் மீறி 29 வயதான மகேஸ்வரன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதே காரில் பயணித்திருந்த மேலும் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது ஆபத்தற்றதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பிரவீன், யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அண்மைக்காலமாக சவுத் ஹாரோ பகுதியில் வசித்து வந்ததாகவும் அறியப்படுகிறது.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து பிரித்தானிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.








