அனுராதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் ஏழு, எட்டு, பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், அவ்வாறான சம்பவங்களுக்கு இல்லாத எதிர்ப்பு தற்போது அட்டமஸ்தானாதிபதி தேரருக்கு எதிராக எழுப்பப்படுவது, அவர் ஒரு புத்த பிக்குவாக இருப்பதாலேயே எனவும், இந்த எதிர்ப்பின் பின்னணியில் சம்பவத்துக்கு எதிரான நிலைப்பாட்டை விட புத்த மதத்திற்கு எதிரான மனோபாவமே அதிகமாக உள்ளதாகவும் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்காக முன்னிலையான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் சந்தேகநபரான தேரருக்காக முன்னிலையாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதவான் நீதிமன்றம் என்பது வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றம் அல்ல என்றும், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பிணை வழங்கப்படுவது சாதாரண சட்ட நடைமுறை என்றும், பிணை மறுப்பதே விதிவிலக்கான சூழ்நிலை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேசமயம் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதனதேரர், பணத்திற்காகத் தனது மகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்குத் தெரிந்தே தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தாய் ஆகியோரை கடும் பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க கடந்த 22 நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








