தெஹிவளை – கல்கிசை நிசல செவன பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி மயானத்தில் இருந்த 56 வயதுடைய நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
9 மில்லிமீட்டர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் குறித்த நபரின் இடது கை மற்றும் மார்பு பகுதியில் காயங்கள் ஏற்பட்டதுடன், அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரை நேற்று (26) தெல்கந்த பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர். அவரிடமிருந்து 7 கிராம் 200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 வயதுடைய குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குற்றச்செயலை மேற்கொள்வதற்காக ரூ. 200,000 வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 55,000 பணம் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மூன்று கைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








