அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் அரசாங்கம் பாரபட்சமான முறையில் செயல்பட்டதாக தினன தகுண கூட்டிணைவு குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்த அமைப்பின் நிறைவேற்று சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 22ஆம் திகதி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற சம்பவங்கள், நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாரதூரமான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சந்தேகநபருக்கு பொலிஸார் வழங்கியதாகக் கூறப்படும் விசேட பாதுகாப்பு மற்றும் சலுகைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. சாதாரண சந்தேகநபர்களுக்கு வழங்கப்படாத வசதிகள் இவ்வழக்கில் வழங்கப்பட்டதாகவும், இது சட்டத்தின் முன் சமத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும், இதனால் விசாரணையின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கும் உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கும் இடையிலான உறவுகள் விசாரணையில் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்ற அச்சமும் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, வழக்கு விசாரணை நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணையில் தலையீடு செய்ததாகக் கூறப்படும் அதிகாரிகள் தொடர்பில் சுயாதீன மற்றும் வெளிப்படையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தினன தகுண கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், மதம், அரசியல் அதிகாரம் அல்லது சமூக செல்வாக்கு ஆகியவை எதுவாக இருந்தாலும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.








