கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரின் தோளில் இருந்த பயணப் பையை சோதனையிட்டபோது, ஒளிபுகும் பொலித்தீன் மற்றும் காகிதத்தால் சுற்றப்பட்டிருந்த பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மேலதிகமாக பரிசோதித்ததில், அதற்குள் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பிக்கு புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்தவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பின்னர், கைப்பற்றப்பட்ட பொதியில் 88,700 மில்லிகிராம் ஹெரோயின் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.








