1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இன வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்றது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) உள்ளிட்ட பல தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. பிற்பகல் 1.00 மணி முதல் 3.00 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1983 ஜூலை மாதத்தில் இடம்பெற்ற இன வன்முறைகளில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
கருப்பு நிற ஆடைகளை அணிந்த தமிழர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நீதிக்கான கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திய அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியை உறுதிப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தனர்.








