உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.
அதேவேளை, நீதிமன்றத்தில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சுரேஷ் சலேவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அது ஏற்கனவே பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகள், ஆணைக்குழு அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், புதிய கோணத்தில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் கருத்துகள் மக்கள் மனதை குழப்பும் முயற்சி எனவும், இது அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், அரசாங்கம் கவனத்தை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2019 தாக்குதல் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புத் துறையின் முக்கிய பதவிகளில் இருந்த சிலர், புலனாய்வு தகவல்கள் இருந்தும் தாக்குதலைத் தடுக்கத் தவறிய நிலையில், இன்று அவர்கள் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்றைய பொறுப்பின்மையை மறைத்து, தற்போது பிற அதிகாரிகளை குறிவைப்பது அரசியல் பழிவாங்கல் எனவும் அவர் விமர்சித்தார்.
இறுதியாக, புலனாய்வு அதிகாரிகளை அரசியல் காரணங்களுக்காக பலிகடாவாக்குவதை நிறுத்தி, சட்டம் நியாயமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சரத் வீரசேகர வலியுறுத்தினார்.








