இந்திய அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.
இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வாகனங்கள் வட மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.
அதேவேளை, இந்த அன்பளிப்பை பாராட்டும் வகையில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர் ராஜீவ் பண்டிதகே, இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் மற்றும் இலங்கை பொலிஸின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.








